வெள்ளி, 25 டிசம்பர், 2009

மீட்டல்...





இரைதேடிப் பறக்கும்
பறவைபோல காதல்
கரைதேடிப்பறக்கிறது
சிறகொடிந்த இந்த உயிர்....

'உன் இதழுக்கு மட்டும் ஏன்
அத்தனை சிவப்பெழில்?
உதட்டுச்சாயத்துக்கு என்
உதிரத்தை பூசிக்கொண்டதாலா...? '

முற்றும் துறந்து
உன்னையே தன்
முற்றமெனச் சுற்றுகிறது
என் உயிர்...

தேடலில் தொலைந்தது என்
கிழமைகள் - வறட்டுக்
கிழமாய் என்னை
அடையாளப்படுத்திக்கொள்கிறது

வெற்றுக் கிழமைகளாயே
தொலைக்கப்பட்டுவிட்டது
முற்றுப் பெறாத என் இளமை...

உயிர் இன்னமும்
உன்னையே சுற்றி
உயிர்ப்பிழந்து போனது...

கண்ணீர் என்னுள்
கவிதைகளைக் கிளறுகிறது
உன்னில் நான்
தொலைந்து போன
வினாடிகளை மீட்டெடுக்க
முயல்கிறது...

வேட்கையில் தொலைந்துபோன
வேதனைக் கிழமைகளை....
எவ்வளவு முயற்சித்தும்
உன்னிலிருந்து என்னை
மீட்க முடியவில்லை....

நீ இல்லாத ஒரு
நியூரானைக்கூட
தனித்துப் பிரித்திட
இயலாது என்
நினைவகத்தில்...

நீ பல்லவி -
நான் சரணம்
உன் கரணம் தப்பும்போது
நான் மரணம்...
 
என்னை
அச்சு பிசகாமல்
மீட்டி வைத்திருக்கிறாய்...
நரம்பறுந்த பின்னும் - உன்
நாதம் தொடர்கிறது....

வெள்ளி, 18 டிசம்பர், 2009

கனவு...


பகலில் பதட்டமிற்றிப்
பரிகசிக்கும் நீ
கண்ணிறைந்த பயத்துடன்
உறைவிடம் தேடி
ஓடிவருகிறாய்...
இரவில் கனவாக...

என் காதலைச்
சோதிக்க நினைக்கும்
உன் நினைவலைகள்
மெள்ளமாய்
கண்களை நிமிண்டித்
திறந்துபார்க்கிறது...
உள்ளுக்குள் நீ
ஒளிந்திருக்கிறாயா என்று...

சந்தேகம் ஏன்..?
என் நினைவுகளுக்குள்
வேறுஎதைப் புதைத்து
அழகுபார்க்க முடியும்
உன்னைத் தவிர....

உறங்கும் போதும்
உயிருக்குள் உன்னை
உயிர்பித்து என்னைச்
சோதித்துப்பார்க்கிறது
இந்தக்கனவு...

வேறு எதை வைத்து
என் காதலை
அளந்து பார்க்க முடியும்
உன்னை நினைத்தால்
அழையாமலேயே
என்னுள் பூக்கும்
சில துளி
கண்ணீரைத் தவிர...

என்னிச்சை கேளாமல்
அன்னிச்சையாய்த் தோன்றி
உன்னிச்சை மேம்பட...
தன்னிச்சையாய்
உனை அழைத்துத்
தன்னை  மகிழ்வித்துக்
கொள்(ல்)கிறது கனவு..

உறங்கும்போதும்
என் கனவு
காணும் கனவு
நீ....

செவ்வாய், 8 டிசம்பர், 2009

ஒளிதல்..


காதல் பிரபஞ்சத்தில்
உன் அபரிமிதமான
ஈர்ப்புவிசையில் சிக்கித்தான்
இயங்கிக்கொண்டிருகிறது
இந்த இதயம்....
 
உன் ஈர்ப்புவிசை நேர்த்தியானது...
சுற்றும் என் இதயத்தைச்
சூடாக்கி அழகுபார்க்கிறது...
 
இறக்கை முளைத்த
பறவையென உன்
ஈர்ப்புவிசை விலகிப்
பறக்க எத்தனிக்கிறேன்....
நீயோ என்னைப்
பித்தனாக்கி சிரிக்கிறாய்...
 
உன்னிலிலேயே
ஒழிந்துபோக மனமற்று
உன்னிலிருந்து விலகியோட
ஒளியும் இடம் தேடிப்
பறக்கிறேன் - நீயோ எங்கும்
ஒளிவீசித் தகர்க்கிறாய்...
 
எங்குசென்று ஒளிந்தாலும்
அங்கும் வந்து என்னை
அலைக்களிக்கிறாய் - நீ
அதில் களிக்கிறாய்...
 
உன்
பெண்மைக்கு பயந்து
உண்மைக்குள் ஒளிந்தேன்..
பொய்ப்பிம்பமாய் என்னை
உலரவைத்தாய்...
 
விண்ணில் ஒளிந்தேன்
நிலவாய் வேவுபார்த்து
நிதர்சனம் களைத்தாய்...
 
மண்ணுக்குள் ஒளிந்தேன்...
மானுடம்பின் உயிராய்..
மண்ணில் வேரூன்றியே
காணுலகின் மரமாய் நீ....
 
இருளுக்குள் ஒளிந்தேன்..
வெளிச்சமாய் உருமாறி
மருளவைத்தாய்...

இரக்கமற்ற இரவுக்குள்
உறக்கமற்று ஒளிந்தேன்..
அதிகாலை அழைப்பிதழாய்..
சுதிசேர்த்து நின்றாய்...
 
ஒலிக்குள் ஒளிந்தேன்
இசையாய் இசைந்தாய்...
விழிக்குள் ஒளிந்தேன்
பாவையாய் ஒளிப்பித்தாய்....
 
தமிழுக்குள் ஒளிந்தேன்
கவிதையாய்த் தீண்டினாய் 
அமிழ்தத்தில் ஒளிந்தேன் - சுவை
தெவிட்டாது தித்தித்தாய்...
 
எங்கெங்கோ ஓடி
ஒளிய இடம்தேடினேன்...
எங்கும் நிறைந்து
ஒளிவீசி நின்றாய்...
 
இனி எனக்கு 
வேறு வழியென்ன இருக்கிறது...?
இனிய கவிதை
வேறு எங்குசென்று
ஒளிய முடியும்...
தமிழைத்தவிர....???