சனி, 28 ஆகஸ்ட், 2010

கொடுக்கு...



உனக்கெனவே காத்திருந்து
வெளிறிப்போன
அர்த்தமற்ற நொடிகளில்...

உன்
உன்னதப் பார்வைக்கென
ஏங்கிப் பறிதவித்த
நுட்ப வினாடிகளில்...

துடிப்புகளில்
சமிக்ஞை உணர்ந்து
இடம்பெயரும்
உதிரத்துளிகளிடையே
ஒவ்வொரு துடிப்பினிடையேயும்
உயிர் கொல்லும்
வன்ம வலி....

அதோ
அருகில் நெருங்கிவிட்டாய்..
இடைவிடாது மார்பிலறைந்து
அழும் மனது...
அதிகரிக்கிறது துடிப்பு...

ஒவ்வொரு துடிப்பிற்கும்
இடையில் அந்த
நெடுடல்மிக்க வலியைத்
தெளிவாக உணரமுடிகிறது...

சிற்சில வினாடிகள்
மூச்சை முழுக்க இழுத்து
வலியைத் தேக்கிக்கொள்கிறேன்...

நீ கடக்கிறாய்..
உன் ஸ்பரிசம்
மெல்லக் கரையக்கரைய
இழுத்தடிக்கப்பட்ட மூச்சு
மீண்டும் அந்த
இயல்பான
மரண வலிக்குள் தன்னை
இழுத்துக்கொ(ல்)ள்கிறது...

மென்மையாக
இதயத்தின் இரும்புக்கதவுகளை
எப்படியோ நெம்பி
நுழைந்திருக்கிறது
உன் காதல் கொடுக்கு...


வெண்பா...

அமிழ்தெனும் நஞ்சா யிதயத்துள் காதல்
நிமிண்டி நுழைந்த கொடுக்கு...

சனி, 23 ஜனவரி, 2010

லாடம் கட்டப்பட்ட முகமூடி...


கிழித்துத்தான் எறியமுயல்கிறேன்... 
என் முகம் 
எனக்கே மறந்துபோனது...
ஒட்டிவைக்கப்பட்டிருக்கிறது
உன் முகம்
என் முகமூடியாய்....
 
பயணக்களைப்பு என்னுள்
கண்ணயருவதில்லை.. உன். 
நயங்கள் நினைவிலாடி
கண்ணயர விடுவதுமில்லை...
 
உன் சுமைகளைச் சுமக்கவேண்டி
உனக்காகவே ஏற்றப்பட்ட 
லாடம் சுமையாக
பாடம் படிக்கிறது புத்தி...
 
சுமக்கவியலாது இந்த
முகமூடியைச் சுமக்கிறேன்...
நமநமத்து வியர்த்து வடிந்து
முகவரி தொலைந்து திரிகிறேன்...
 
கல்லடி படாமல் 
பாதம் பாதுக்காக்க - இந்த
முள்ளடி படுகின்றேன்...
 
உனக்கான சுமையை ஏற்றி
இன்பித்துக்கொள்... உன் மகிழ்ச்சியில்
எனக்கான வாழ்நாள்
துன்பத்தோடு இன்பமாய்...
 
சுமை கணன்று நான்
நெஞ்சுமரிக்கும் நாளில்
எனக்கென உன்னுள்
துளிர்க்கும் கண்ணீர்துளி காண
லாடம் கட்டப்பட்ட முகமூடி
காத்திருக்கிறது -
உயிர்மட்டும் இல்லாமல்....

புதன், 20 ஜனவரி, 2010

மண்டி


உன் நினைவுகள்
ஏற்படுத்தும்
இன்பக்காயங்களுக்கு
கவிதையால்
மருந்திடுகிறேன்...
ஆனால் அவை
மேலும் ரணப்படுத்தியே
அழகுபார்க்கின்றன...
 
விளக்கின் சுடர்போல
உன் பிரகாசம்...
வெறும் காற்று நான்...
என் பார்வைக்கு
அஞ்சி சலனப்படாதே...
நீ எரிவதும்
என்னால்தான்...

காதல் என்னுள்
குடம்குடமாக
நிரம்பி வழிகிறது..
எடுத்துச்செல்லத்தான்
உனக்குத் தயக்கம்...

உன் காதலை
நீ சொல்லாதே...
இப்பொழுதெல்லாம் உன்
புன்முறுவலைக்கூட என்னால்
தாங்கமுடிவதில்லை...

உண்மையும் பொய்யும்
மாறிமாறிப்
பிய்த்துத் தின்றதில்
மிஞ்சிப்போன
எச்சம்தான் இளமை...

இன்னமும்
உன் அழகை
அள்ளிப்பருக முனைந்து
எச்சில் வடிக்கிறது
கவிதை..

வெறும் எச்சத்தை
வினையெச்சமாக்கத்
துடிக்கிறது காதல்...

உன்னைப்பற்றிய
கனவுகளாலேயே
எச்சமாக்கப்படுகிறது
என் வாழ்க்கை...

உன் வருகைக்கெனவே
ஏங்கிய கவிதை
தவங்கிடக்கிறது...

உன்
நினைவுகளுக்கெனவே
ஏங்கி
மண்டியிடுகிறது மனம்..

உன்னையே எண்ணி
உன்னோடே என்னை
முடித்துக்கொண்டதில்
யுகங்களை வினாடிகளாக்கி
வீணாய்ப்போனது இளமை...

என் இளமையின்
அனைத்து
துளிகளையும்
துடைத்து எடுத்துவிட்டாய்...
இன்னமும்
மிச்சமிருக்கும்
காதல் மண்டியாக.....