புதன், 20 ஜனவரி, 2010

மண்டி


உன் நினைவுகள்
ஏற்படுத்தும்
இன்பக்காயங்களுக்கு
கவிதையால்
மருந்திடுகிறேன்...
ஆனால் அவை
மேலும் ரணப்படுத்தியே
அழகுபார்க்கின்றன...
 
விளக்கின் சுடர்போல
உன் பிரகாசம்...
வெறும் காற்று நான்...
என் பார்வைக்கு
அஞ்சி சலனப்படாதே...
நீ எரிவதும்
என்னால்தான்...

காதல் என்னுள்
குடம்குடமாக
நிரம்பி வழிகிறது..
எடுத்துச்செல்லத்தான்
உனக்குத் தயக்கம்...

உன் காதலை
நீ சொல்லாதே...
இப்பொழுதெல்லாம் உன்
புன்முறுவலைக்கூட என்னால்
தாங்கமுடிவதில்லை...

உண்மையும் பொய்யும்
மாறிமாறிப்
பிய்த்துத் தின்றதில்
மிஞ்சிப்போன
எச்சம்தான் இளமை...

இன்னமும்
உன் அழகை
அள்ளிப்பருக முனைந்து
எச்சில் வடிக்கிறது
கவிதை..

வெறும் எச்சத்தை
வினையெச்சமாக்கத்
துடிக்கிறது காதல்...

உன்னைப்பற்றிய
கனவுகளாலேயே
எச்சமாக்கப்படுகிறது
என் வாழ்க்கை...

உன் வருகைக்கெனவே
ஏங்கிய கவிதை
தவங்கிடக்கிறது...

உன்
நினைவுகளுக்கெனவே
ஏங்கி
மண்டியிடுகிறது மனம்..

உன்னையே எண்ணி
உன்னோடே என்னை
முடித்துக்கொண்டதில்
யுகங்களை வினாடிகளாக்கி
வீணாய்ப்போனது இளமை...

என் இளமையின்
அனைத்து
துளிகளையும்
துடைத்து எடுத்துவிட்டாய்...
இன்னமும்
மிச்சமிருக்கும்
காதல் மண்டியாக.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக